×

ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஏற்காடு காபிக்கொட்டைக்கு மவுசு 50 கி. மூட்டை ரூ.16,000க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: பல மாநிலங்களில் காபிக் கொட்டை சீசன் இல்லாததால் ஏற்காடு காபிக்கெட்டைக்கு மவுசு கூடியுள்ளது. இதனால் கடந்த இரு மாதத்தில் 50 கிலோ மூட்டைக்கு ரூ.1000 அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக அளவில் பிரேசிலில்தான் அதிகளவில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. உலக வர்த்தக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 75 சதவீதம் கர்நாடகாவிலும், 20 சதவீதம் கேரளாவிலும், 5 சதவீதம் தமிழகத்திலும் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 35 ஆயிரத்து 600 ஹெக்டேரில் காபி பயிரிடப்படுகிறது. இதில் அராபிகா வகை பயிர் 29 ஆயிரத்து 338 ஹெக்டேரிலும், ரோபாஸ்டா வகை பயிர் 6 ஆயிரத்து 314 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 14 ஆயிரத்து 450 டன் அராபிகா, 5 ஆயிரத்து 590 டன் ரோபாஸ்டா காபிக்கொட்டை விளைச்சல் கிடைக்கிறது. அந்த வகையில் ஏற்காட்டில் 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் காபி பயிர் செய்யப்படுகிறது. இங்கு அராபிகா வகை காபி பயிர்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

வாசனை மற்றும் திடம் காரணமாக எப்ேபாதுமே அராபிகா காபிக்கு மவுசு அதிகம். கடந்த 2021ல் 50 கிலோ மூட்டை கொண்ட அராபிகா காபி கொட்டை ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13,500 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை அதிகரித்து கடந்த ஏப்ரலில் ரூ.15 ஆயிரம் என விலை உயர்ந்தது. இரு மாதத்திற்கு முன்பு மூட்டைக்கு ஆயிரம் அதிகரித்து, தற்போது ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோபாஸ்டா வகை காபி ரூ.11 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் அங்கு பூ பூப்பது நல்லமுறையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் விளைச்சல் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதேவேளையில் கர்நாடகாவிலும் நடப்பாண்டு காபி விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் தற்போது சீசன் இல்லாததால் ஏற்காடு காபிக்கு மவுசு கூடி விலையும் அதிகரித்து காபி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஏற்காடு காபி விவசாயிகள் கூறியதாவது: ஏற்காட்டில் 120க்கும் மேற்பட்ட காபி தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். இங்கு சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவிரிபீக், கொட்டச்சேடு, தலைசோலை உள்பட பல கிராமங்களில் காபி பயிர் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

காபி ஓராண்டு பயிராகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காபி செடி விளைவிக்கப்படும். இவை செப்டம்பர், அக்டோபரில் பூ பூக்கும். நவம்பர், டிசம்பரில் அறுவடைக்கு தயாராகும். மற்ற கால கட்டங்களில் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கும். ஏற்காட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் காபிக்கொட்டை உற்பத்தியாகிறது. ஏற்காடு காபிக்கொட்டை ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோட்டங்களில் காபி பயிர் மட்டுமின்றி ஊடுபயிராக மிளகு, பேரிக்காய், கமலா ஆரஞ்சு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்படுகிறது. ஏற்காட்டில் கடந்த சில ஆண்டாக ஒரு கிலோ காபிக்கொட்டை ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்பட்டது. கடந்தாண்டு கர்நாடகாவில் காபி கொட்டை விளைச்சல் பாதித்தது. அதனால் ஏற்காடு காபிக்கொட்டைக்கு மவுசு கூடியுள்ளது. பல இடங்களில் காபிக்கொட்டை சீசன் இல்லாததால் வியாபாரிகளின் கவனம் ஏற்காடு பக்கம் திரும்பியுள்ளது. இரு மாதமாக வியாபாரிகள் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். அவர்கள் போட்டி போட்டு காபிக்கொட்டையை ஏலம் எடுக்கின்றனர். தேவை அதிகரிப்பால் காபிக்கொட்டை விலையும் அதிகரித்துள்ளது. இரு மாதமாக ஒரு கிலோ அராபிகா காபிக்கொட்டை ரூ.300க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.320க்கு விற்கப்படுகிறது என்றனர்.

The post ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஏற்காடு காபிக்கொட்டைக்கு மவுசு 50 கி. மூட்டை ரூ.16,000க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Germany ,USA ,Salem ,Yercaud ,America ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல்